
காதோரம் கெலஞ்ச முடி
கத கதையா பேசுதே
சுவரோர சேந்திருக்கும்
கவுலி சொல்லும் சகுனம் போல;
நீ எடுத்து முடியும் போது
இழுத்து சொருவுவ என்னையும் சேத்து
உச்சி கொண்ட மேலே ஒரு
பிச்சி பூவ நீயும் வைக்க
ஏர பூட்டி உழுதேனே
காரப் போட்ட வாசலெல்லாம்
ஊரு சனம் என்ன பாத்து
உச்சிக் கொட்டி கிசு கிசுத்ததே
பித்து பிடிச்சு அழையுரேனே
சத்துக் கேட்ட மனசாலே
நடவு நெடும் உன் வெரலுக்குள்
எறப்பும் ,பெறப்பையும் ஒளுச்சி வச்ச
சேத்துக்குள்ள உசுரக் கொஞ்சம்
சேத்து நடும் நேசக்காரி
நெடு நெடுன்னு வளந்து நிக்கும் பயிரெல்லாம்
நேத்திக்கடன் ஆடு போல கழுத்து சாய்ஞ்சு
காத்திருக்கே உன் வெரலாலே வெட்டுப்பட
பாக்கு வெத்தல மாத்தும் வர
போக்குக் காட்டி போறவளே
சாக்கு ஒன்னு கெடைச்சாலும்
உன்ன பாக்க மனம் ஏங்குதே
கெண்டைக்கால தொட்டு நிக்கும்
கர வச்ச கண்டாங்கி சேலையில
குறுக்கு மறுக்கா
கட்டம் போட்டு சுத்தி நிக்கும்
வண்ண வண்ண நூலப்போல
சின்ன சின்ன ஆசையெல்லாம்
வாழ எல குறுத்தப் போல
சுத்திக் கெடக்கு மனசுக்குள்ள
வெட்டி நீயும் எடுத்துப்போயி
வெரலாலே உசுர தெழுச்சி
காதல் சோறும் கவித கூட்டும்
பெசஞ்சி நீ திங்கையில
சோத்தோட என்ன சேத்து
விழுங்கும் உன் விரலுக்கடியில்
விரிஞ்சு கெடக்கேன்
தல வாழ எல போல
No comments:
Post a Comment