Wednesday, September 8, 2010

*நெஞ்சுக்குழி வெசனம்





















அட பொன்னாயி
மவளே
ஆட்டு புளுக்கைய
அள்ளி வய்யி
நெல்லு வயலுக்கு நெறைய போடணும்;

கட்டுத்தறிய

கழுவி மொளுகுடி
செவல மாடு
செளும்புதுன்னு
வடக்குத் தெரு வைத்தியங்கிட்ட
சொல்லிவிட்டுருக்கேன்
நடு பொழுது வந்தாலும்,வருவான்;

பால கறந்து

உறி மேல
ஊத்தி வய்யி
இந்த பாழப்போன
பூனை வந்து படார்ன்னு
தட்டி விட்ரும் ,
கருப்பாத்தா மவுளுக்கு
பொம்பலபிள்ள பொறந்துருக்காம்
கருக்கால வந்து
கொழந்து பாலு வேணுமின்னு
கேட்டு விட்டு போயிருக்கா ;

கொள்ளப் பக்கம்

மேட்டு மேல
முள்ளுச்செடி
மண்டிகெடக்கு,
செதுக்கி சுத்தமாக்கு
பொழுது சாஞ்சா போக முடில
அந்த பக்கம்;

பொரைக்கு வாராலாம்

நம்ம கண்ணாத்தா
ஊல மூக்கன கூட்டி வந்து
அந்த கருத்த சாவுல புடிக்கச் சொல்லு
வறுத்த கறியோட
கோழி கொழம்பு ரசம்
கொஞ்சம் வைய்யு
குடிச்சுட்டு போகட்டும் ;

இப்படித்தான்

விடியக்கால சேவலோட
சேந்தெழுந்து
பொலம்பி கெடக்கும்
இந்த கண்ணு தெரியா
காரவீட்டு கெழவி;

பெத்த புள்ளக

வந்த பொண்டுகளால...
வச்சு பாக்க
வக்கில்லாம வெரட்டிருச்சுங்க ,
சத்தர மூலையில
சாக கிடக்கு
இந்த
சனம் தொலைச்ச கெழவி ;

ஓடியாடி வேல செஞ்ச

ஓடம்பாச்சே
சத்தமில்லாம
செத்த நேரமிருந்தா...
செத்திரும் போல ...
கத்து கெழவி கத்து
கடசீ மூச்சு கரையர வரைக்கும்
கத்து ,
நெஞ்சுக்குழி
வெசனத்தை எல்லாம்
இந்த காத்தால பொழுதிலேயே
கத்தி தள்ளிரு .

No comments:

Post a Comment